செய்திகள்

கேரளாவில் காரில் கடத்தி சென்ற ரூ.72 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2017-01-23 06:47 GMT   |   Update On 2017-01-23 06:47 GMT
கேரளாவில் காரில் கடத்தி சென்ற ரூ.72 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 வாலிபர்களை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மஞ்சேரி பகுதியில் நேற்று இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு கார் அந்த வழியாக வேகமாக வந்தது.

போலீசார் கைகாட்டியும் அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்த காரை துரத்திச் சென்றனர். சில கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காருக்குள் நெல்லிபரம்பூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி (வயது 29), ஷாகித் (25) ஆகிய 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.72 லட்சம் பணம் இருந்தது. அனைத்தும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக காணப்பட்டது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் வாலிபர்களிடம் இல்லை.

இதுபற்றி கேட்டபோது, மாவேலிகரையில் இருந்து ஒருவர் இந்த பணத்தை கொடுத்ததாகவும், அதனை இன்னொருவரிடம் ஒப்படைக்க சொன்னதால் பணத்துடன் சென்றதாகவும் கூறினர்.

இதையடுத்து வாலிபர்களிடம் இருந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் ரூ.72 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் மன்சூர் அலி, ஷாகித் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் வந்த காரும் கைப்பற்றப்பட்டது.

கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹவாலா பணம் கடத்தப்பட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடியே 64 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News