செய்திகள்

தமிழக மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறோம்: காங்கிரஸ்

Published On 2017-01-19 10:01 GMT   |   Update On 2017-01-19 10:01 GMT
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேபோல் தலைநகர் புதுடெல்லிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சுர்ஜிவாலா கூறுகையில், “கலாச்சார பாதுகாப்பு மற்றும் பழமையான பாரம்பரியமான ஜல்லிக்கட்டை பாதுகாக்க போராடி வரும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். அதேபோல் பாதுகாப்பையும் அளிக்க உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News