செய்திகள்

நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் போலீசில் சரண்

Published On 2016-12-07 10:25 GMT   |   Update On 2016-12-07 10:25 GMT
மனைவியை ஆபாசமாக வர்ணித்ததால் நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் போலீசில் சரணடைந்தார். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்ததும், அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 27 வயது இருக்கும். அவரின் உடலில் காயங்கள் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அலிபிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், திருப்பதி அக்காரம்பள்ளி கிராம வருவாய் அதிகாரியிடம், நேற்று 2 வாலிபர்கள் நேரில் வந்து, நண்பனை அடித்துக் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தனர். அவர்களிடம், கிராம வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி, போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது இருவரும், திருப்பதி ஜீவகோணா பகுதியை சேர்ந்த முரளியின் மகன் வினோத்குமார் (வயது 25), முனிச்சந்திரா என்பவரின் மகன் சந்தீப் (22) என்றும், கொலை செய்யப்பட்டவர் ஜீவகோணாவை சேர்ந்த அங்கய்யா (27) என்றும் தெரிய வந்தது.

நண்பர்களான 3 பேரும் திருப்பதியில் உள்ள கடைகளில் வேலை பார்த்து வந்தனர். கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி திருப்பதிக்கு வந்து மதுகுடித்துள்ளனர். போதையில் இருந்த அங்கய்யா, வினோத்குமாரின் மனைவியை ஆபாசமாக வர்ணித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த வினோத்குமார், அங்கய்யாவை கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். பிணத்தை ஆட்கள் நடமாட்டம் இல்லாத கபிலத்தீர்த்தம் வனப்பகுதியில் வீசி சென்றுள்ளனர். கொலைக்கு சந்தீப் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News