செய்திகள்

அம்பேத்கர் 61-வது நினைவு தினம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர்தூவி மரியாதை

Published On 2016-12-06 05:05 GMT   |   Update On 2016-12-06 05:05 GMT
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 61-வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 61-வது தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார். அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இருந்தவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இறந்தார்.

Similar News