செய்திகள்

வெறுப்பவர்களையும் நேசிக்கிறேன்: டுவிட்டர் ஹேக் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி கருத்து

Published On 2016-12-01 14:12 GMT   |   Update On 2016-12-01 14:12 GMT
ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை நேற்று மர்ம நபர்கள் முடக்கினர். இதை அறிந்த ராகுல் காந்தி வெறுப்பவர்களையும் நேகிக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது அலுவலகத்தின் பெயரில்  ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்துள்ளார். நாட்டின் அரசியல் சூழல் தொடர்பான கருத்துகளை அவ்வப்போது தனது கணக்கில் அவர் பதிவேற்றி வருகிறார். அந்த டுவிட்டர் தளத்தில் ஏராளமான பின்தொடர்பாளர்களையும் அவர் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த கணக்கில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் மர்மநபர்கள் சிலர் ஊடுருவி, அவரது கணக்கை முடக்கினர். மேலும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாசமான வார்த்தைகளையும் அதில் பதிவிட்டு இருந்தனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தியின் அலுவலக அதிகாரிகள், பின்னர் அந்த வாசகங்களை நீக்கிவிட்டனர்.

இந்த சதிச்செயல் குறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நள்ளிரவில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், ராகுல் காந்தியின் கணக்கை முடக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஐ.பி. விலாசம் உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு ‘டுவிட்டர்’ தலைமையகத்திடம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட தனது டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை முதல் பதிவிட்ட ராகுல் காந்தி, "என்னை வெறுப்போர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். நீங்கள் அனைவருமே இனிமையானவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News