செய்திகள்

விஜயவாடாவில் தலைமை செயலக கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா: சந்திரபாபு நாயுடு - அருண்ஜேட்லி பங்கேற்பு

Published On 2016-10-28 08:25 GMT   |   Update On 2016-10-28 08:25 GMT
விஜயவாடாவில் தலைமை செயலக கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய மந்திரிகள் அருண்ஜேட்லி, வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நகரி:

ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 2½ வருடம் ஆகிறது. இதையடுத்து விஜயவாடா அருகே புதிய தலைநகரம் உருவாகிறது.

தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் அங்கு கட்டப்படுகிறது.

புதிய தலைநகரத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி விஜயவாடா அருகே தாழலாயா பாளையம் என்ற பகுதியில் சந்திரபாபு நாயுடு பூமி பூஜை நடத்தினார்.

அதே ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி அங்குள்ள உத்தரண்ட ராயினி பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய தலைநகரத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அவல கல் பூடி பகுதியில் தற்காலிக தலைநகரம் அமைப்பதற்காக சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் தலைநகரத்தில் அமைய உள்ள தலைமை செயலகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு இன்று பிற்பகலில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய மந்திரிகள் அருண்ஜேட்லி, வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

950 ஏக்கர் பரப்பளவில் ரூ.5600 கோடி செலவில் இங்கு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு தலைமை செயலக கட்டிடம், சட்ட மன்றம், மேல்-சபை கட்டிடம், ராஜ்பவன், முதல்- மந்திரி இல்லம், தலைமை செயலாளர், மந்திரிகள், அதிகாரிகளுக்கான இல்லங்கள் கட்டப்பட உள்ளன.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News