செய்திகள்

பாரீஸ் தாக்குதல் குற்றவாளிகளை தமிழக வாலிபருக்கு தெரியும்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Published On 2016-10-24 04:09 GMT   |   Update On 2016-10-24 04:09 GMT
தமிழ்நாட்டில் கடையநல்லூரில் பிடிபட்ட சுபாஹனி ஹாஜா மொய்தீனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
புதுடெல்லி:

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சமீபத்தில் கைது செய்தது. அவர்களில், தமிழ்நாட்டில் கடையநல்லூரில் பிடிபட்ட சுபாஹனி ஹாஜா மொய்தீனும் (வயது 31) ஒருவர். அவரிடம், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன.

சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு அதில் அவர் சேர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து துருக்கி வழியாக ஈராக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றார். அவர் அங்கிருந்தபோது, அப்தல்ஹமித் அபாத், சலா அப்தஸ்லாம் உள்ளிட்டோரை சந்தித்தார். மேற்கண்ட இருவரும்தான், பின்னாளில் (கடந்த ஆண்டு நவம்பர் மாதம்) பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரு தியேட்டரில் தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாக காரணமாக இருந்தவர்கள் ஆவர்.

அதனால், பாரீஸ் தாக்குதலுக்கு முன்பே, அவர்களைப் பற்றி தனக்கு தெரியும் என்றும், ஆனால் அந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் தனக்கு தெரியாது என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் மொய்தீன் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள், பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News