செய்திகள்

பேரன் பிறக்காத ஆத்திரத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கொன்றப் பெண்

Published On 2016-09-28 06:30 GMT   |   Update On 2016-09-28 06:30 GMT
அரியானா மாநிலத்தில் பெண் குழந்தையை பெற்ற மருமகள் மீதான ஆத்திரத்தில் அவரது மாமியார் பிறந்து இரண்டே மாதங்களான பச்சிளம் குழந்தையை தரையில் மோதி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் பெண் குழந்தையை பெற்ற மருமகள் மீதான ஆத்திரத்தில் அவரது மாமியார் பிறந்து இரண்டே மாதங்களான பச்சிளம் குழந்தையை தரையில் மோதி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநில தலைநகரான சண்டிகரில் உள்ள சோனிபட் பகதுர்கர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்தக் குழந்தையை அதன் தந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும்வந்து பார்க்காத நிலையில் அந்தப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் என்றும் மிரட்டினர்.

அவர்களின் கோபம் தணியட்டும் என்று காத்திருந்த அந்த இளம்பெண், குழந்தை பிறந்த இருமாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கைக்குழந்தையுடன் பகதுர்கர் பகுதியில் உள்ள தனது புகுந்தவீட்டுக்கு சென்றார். அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் தகராறு செய்த கணவரின் தாயார், அந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நெறித்து, ஆவேசமாக தரையில் மோதி அடித்தார்.

இதைக்கண்டு பதறிப்போன குழந்தையின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தனது மகளை தூக்கிகொண்டு அருகாமையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால், வரும் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர் கைவிரித்து விட்டார்.

அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் கணவரின் வீட்டுக்கு அந்த இளம்பெண் திரும்பினார். அவரது தோளில் கிடந்த குழந்தையின் பிரேதத்தை பறித்த மாமியார், மாமனார் மற்றும் ஆகிய மூவரும் ஒன்றுசேர்ந்து அதை ரகசியமாக புதைத்து விட்டனர்.

இதுதொடர்பாக, சோனிபட் நகரில் உள்ள தனது பெற்றோருக்கு அந்த இளம்பெண் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தையின் பிரேதத்தை நேற்று தோண்டிஎடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News