செய்திகள்

வாட்ஸ்-அப்பில் ஆபாச படம்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Published On 2016-09-24 08:17 GMT   |   Update On 2016-09-24 08:17 GMT
‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச படம் வெளியிட்டதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ளது பாக்பத் நகரம். இது டெல்லியை ஒட்டி உள்ளது. இந்த ஊரை சேர்ந்த 17 வயது இளம் பெண் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வந்தார். இவரது தந்தை காசியாபாத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.

இந்த பெண்ணும், ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இடையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவியும், வாலிபரும் ஒன்றாக இருந்த போது எடுக்கப்பட்ட ஆபாச படத்தை மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பினார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறினார்.

கிழக்கு டெல்லிக்கு சென்ற அவர், அங்குள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது மகளுக்கு சம்பந்தப்பட்ட வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அடிக்கடி வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்களை அனுப்பினார். அவளுக்கு மட்டுமல்ல, எனது போன் மற்றும் எனது மகனின் போனுக்கும் இது போன்ற ஆபாச தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் ஆபாச படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என கூறினார்.

தற்கொலை செய்த மாணவி தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நான் ஒரு போதும் உங்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. அந்த வாலிபரிடம் பேசியதன் மூலம் நான் தவறு செய்து விட்டேன். எனது தவறு ஒருபோதும் நிவர்த்தி செய்ய முடியாத ஒன்று. எல்லா நாடகமும் என்னால் தான் தொடங்கியது. எனது சாவு மூலம் இந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள். அந்த வாலிபரும், அந்த பெண்ணும் ஒன்றாக இருக்கும் படத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

Similar News