செய்திகள்

காரில் தூங்கிய குழந்தை மூச்சு திணறி உயிருக்கு போராட்டம் - கண்ணாடியை உடைத்து போலீசார் மீட்டனர்

Published On 2016-09-08 06:57 GMT   |   Update On 2016-09-08 06:57 GMT
தெலுங்கானாவில் காரில் தூங்கிய குழந்தை மூச்சு திணறி உயிருக்கு போராடியபோது போலீசார் முன்புற கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர்.
நகரி:

தெலுங்கானா மாநிலம் உப்பல் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நேற்று மாலை தங்கள் குழந்தையுடன் காரில் பெங்களூருக்கு புறப்பட்டனர். ரங்காரெட்டி மாவட்டம் சம்சாபாத் பகுதியில் காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஓட்டலுக்கு டிபன் சாப்பிட சென்றனர்.

அப்போது அவர்களின் குழந்தை காரில் தூங்கிக் கொண்டிருந்ததால் சாவியை காரில் வைத்துவிட்டு கார் கதவை லேசாக திறந்து வைத்து சென்றனர். அப்போது கார் கதவு திடீரென்று தானாக பூட்டிக்கொண்டது.

காருக்குள் காற்று செல்ல இடமில்லாததால் குழந்தை தூக்கத்தில் இருந்து எழுந்து மூச்சு திணறி உயிருக்கு போராடியது. உடனே குழந்தை கார் கண்ணாடி கதவை தட்டியது. உடனே அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். கார் கததை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே மூச்சு திணறிய குழந்தைக்கு வியர்த்து கொட்டியது.

உடனே போலீசார் முன்புற கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர். இதற்கிடையே குழந்தையின் பெற்றோரும் ஓட்டலில் இருந்து வெளியே வந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.

Similar News