உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 4,500 டன் அரிசி

Published On 2022-06-24 09:50 GMT   |   Update On 2022-06-24 09:50 GMT
  • திருச்சியில் இருந்து இலங்கைக்கு நிவாரணமாக 4,500 டன் அரிசியை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது
  • சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ.1.50 பைசா வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்

திருச்சி:

இந்தியாவின் அண்டை தேசமான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் தமிழக அரசும் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

மேலும் அடுத்த கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரிசி கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்தனர்.

இதில் திருச்சி மாவட்டத்திலுள்ள 5 அரிசி ஆலைகள் 4 ஆயிரத்து 500 டன் அரிசிக்கு ஆர்டர் பெற்றன. இதையடுத்து அரிசி உற்பத்தி செய்யும் பணிகள் இரவு, பகலாக அந்த ஆலைகளில் நடந்து வருகின்றன. முதல்தரமான இந்த அரசுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.32 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரிசியினை சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ.1.50 பைசா வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தற்போது வரை 1,600 டன் அரிசி திருச்சியிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆர்டர் பெற்றுள்ள திருச்சி அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது.

அண்டை தேசமான இலங்கை மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நாங்கள் செய்கிறோம். தமிழக அரசின் தர நிபந்தனைகளை கடைபிடித்து ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து அரிசி பேக்கிங் செய்யப்படுகிறது என்றார்.

இதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், அரிசி உற்பத்தி மற்றும் பேக்கிங் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. விரைந்து முடிக்க ஆலைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News