புதிய கண்டுபிடிப்புகளில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
- ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.
- அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அறிவியல் சார்ந்த பொறியியல், மின்னியல் மற்றும் ரோபோட்டிக் துறையில் மாணவர்களின் சிந்தனைகளை தூண்டவும், பற்பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்கப்படுத்தவும் இந்த ஆய்வுக்கூடத்தில் பல்வேறு உபகரண பொருட்கள் தரப்பட்டுள்ளது.6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அனைத்து உபகரணங்களையும் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல் இரண்டு வகுப்புகளிலேயே மாணவர்கள் சுயமான தானியங்கி சென்சார் மூலம் திறந்து மூடும் கதவுகளை கொண்ட வீடு, தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரம்பியதை அறிவிக்கும் அலாரம், மனிதர்கள் வீட்டுக்குள் நுழைவதை கண்டறியும் தானியங்கி சென்சார் போன்றவற்றை வடிவமைத்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் பிரத்யேகமாக உரிய நிபுணர்கள் மூலம் அனைத்து பொருட்களையும் கையாள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆய்வுக்கூடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி பார்வையிட்டார். புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டினார்.பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, இயற்பியல்துறை முதுகலை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஜெயமோகனகிருஷ்ணன், பி.டி.ஏ., துரைசாமி, நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் நிர்வாகிகள் செந்தில்குமார், கிரீஷ், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஸ்டாலின் மணிக்குமார், ஜெகன் அலெக்ஸ், ராமசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.