உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
- கோடை காலம் முடிந்த நிலையிலும் மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உலா வருகின்றன.
- யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிப்பது, வாகனங்களை நிறுத்தி செல்போனில் படம் பிடிப்பது, கூச்சலிடுவது என தொந்தரவு செய்யக்கூடாது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.
கோடை காலத்தில் தண்ணீர் தேடி யானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். மேலும் சாலையிலும் நீண்ட நேரம் உலா வரும். தற்போது கோடை காலம் முடிந்த நிலையிலும் மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உலா வருகின்றன. குறிப்பாக புங்கன் ஓடை, எஸ்.பெண்ட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக யானைகள் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிப்பது, வாகனங்களை நிறுத்தி செல்போனில் படம் பிடிப்பது, கூச்சலிடுவது என தொந்தரவு செய்யக்கூடாது.அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.