உள்ளூர் செய்திகள்
* * * கோவில் திருவிழாவில் பெண்கள் நெல் காணிக்கை செலுத்தியதும், எருதுவிடும் ஓட்டம் நடத்தியதையும் படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் நெல் காணிக்கை, எருதுவிடும் ஓட்டம்

Published On 2022-07-06 09:15 GMT   |   Update On 2022-07-06 09:15 GMT
  • கோவிலுக்கு பெண்கள் நெல்லை காணிக்கையாக எடுத்து ஊர்வலமாக சுமந்து வந்து கோவில் முன்மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்தனர்.
  • இதன் மூலம் தங்கள் கிராமத்தில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அருகில் உள்ள கெச்சானிபட்டியில் பழமையான விநாயகர், வெங்கடேசபெருமாள், திம்மம்மாள், பாப்பம்மாள், செட்டியம்மாள், திருமம்மாள், சின்னம்மாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பெரிய கும்பிடு விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1ம் தேதி பொதி நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் பொங்கல் வைத்தல், மாமன் மைத்துனர் கும்பிடு வாங்குதல், நெல் காணிக்கை செலுத்துதல், பொம்மை பிடித்து சாமி கும்பிடுதல் என பல்வேறு பாரம்பரியமிக்க வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நிறைவுநாள் நிகழ்ச்சியாக சலகருது மாடுகளின் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் கொத்து கொம்பிலிருந்து கோவில் வரை மாடுகள் சலங்கையுடன் ஓடிவந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் கோவிலுக்கு பெண்கள் நெல்லை காணிக்கையாக எடுத்து ஊர்வலமாக சுமந்து வந்து கோவில் முன்மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்தனர். இதன் மூலம் தங்கள் கிராமத்தில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாரம்பரியம்மிக்க இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்தும் ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News