உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே இளம்பெண் கொலை

Published On 2023-11-01 05:49 GMT   |   Update On 2023-11-01 06:23 GMT
  • கணவன்-மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தகராறு இருந்து வந்தது.
  • மீனாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). உடைமரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் வெளியே ஓடினார். எனினும் ராஜ்குமார் துரத்திச் சென்று வீட்டு வாசலில் வைத்து மனைவியை வெட்டிக் கொன்றார்.

இது தொடர்பாக முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார் முறப்பநாடு போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

மீனாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மீனா என்னிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீடான மும்பைக்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர் சமாதானம் செய்தனர். இதனால் மீண்டும் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் நடத்தை சந்தேகம் காரணமாக எங்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அங்கிருந்து தப்பிய நான் பின்னர் போலீசில் சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News