சேலம் அருகே ஏட்டு மீது கொலைவெறி தாக்குதல்-வாலிபருக்கு ஜாமீன் மறுப்பு
- போலீசார் விசாரணை நடத்தி ஏட்டை தாக்கிய அண்ணன்-தம்பிகளான முத்துராஜா, சிவசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- தலைமறைவான முத்துராஜாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் இருசப்பன் (வயது 46).
இவர் கடந்த 3-ந் தேதி இரவு பணியை முடித்து விட்டு மாங்கானூர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர், கார் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை ரோட்டில் நிறுத்தியிருந்தனர்.
இதனை பார்த்த ஏட்டு இருசப்பன் வழிவிட்டு நில்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும், அவரை கொடூரமாக தாக்கினர்.
கல்லால் தாக்கியதில் தலை, உதடு, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஏட்டு இருசப்பன் புகார் கொடுத்தார். காயம் அடைந்த இருசப்பன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டன. மேலும், அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஏட்டை தாக்கிய அண்ணன்-தம்பிகளான முத்துராஜா, சிவசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சிவசக்தி கைதான நிலையில் முத்துராஜா தலைமறைவாகி விட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிவசக்தி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடந்து வந்தது.
ஏட்டு இருசப்பனுக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கக் கூடாது எனவு அரசு வக்கீல் தம்பிதுரை வாதிட்டார். இதையடுத்து சிவசக்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தலைமறைவான முத்துராஜாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.