உள்ளூர் செய்திகள்

நெற்குன்றத்தில் பா.ம.க. பிரமுகரை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது

Published On 2023-01-07 06:03 GMT   |   Update On 2023-01-07 06:03 GMT
  • பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிவாளுடன் சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ஞானசேகரன் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

போரூர்:

சென்னை நெற்குன்றம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். பா.ம.க வட்ட துணை செயலாளர்.

இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் அவசர தேவைக்காக ரூ.20 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அதை தினசரி ரூ.200 வீதம் கட்டி வருகிறார்.

இந்த நிலையில் ஞானசேகரன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டதால் கடந்த ஒரு வாரமாக வெங்கடேசுக்கு பணம் கட்டவில்லை. இதையடுத்து வெங்கடேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ஞானசேகரன் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் நேற்று சாலி கிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள ஞானசேகரன் அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்று 'உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிவாளுடன் சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஞானசேகரன் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வெங்கடேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News