உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான வாலிபர்கள்.

கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் புளியமரத்தில் மோதி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி

Published On 2022-09-24 05:11 GMT   |   Update On 2022-09-24 05:11 GMT
  • கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர்.
  • திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த நம்பியூர் செட்டியாம்பதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திக் (22). பாத்திர வியாபாரி. நம்பியூர் அடுத்த எலத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார். இவரது மகன் சங்கர் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

நேற்று இரவு கார்த்திக் மற்றும் சங்கர் 2 பேரும் கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியில் உள்ள கார்த்திக் மாமா ரவிக்குமார் என்பவர் வீட்டுக்கு வந்தனர்.

அங்கு இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கார்த்திக், சங்கர் ஆகியோர் நம்பியூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்ட பின்னால் சங்கர் அமர்ந்து சென்றார்.

அவர்கள் கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார்த்திக் மற்றும் சங்கர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News