உள்ளூர் செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

Published On 2023-09-08 07:36 GMT   |   Update On 2023-09-08 07:36 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது.
  • புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளிகிருஷ்ணன்(19) என்பவர் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் உடன் படிக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த தருண் (19) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டிமோதலாக மாறியது. மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையும் மாணவர்களுக்கிடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்திலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முரளி கிருஷ்ணன், நண்பர்களான, தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருடன் காசிமேடு கடல் பகுதிக்கு சென்றார். இதனை அறிந்து அங்கு சென்ற தருண் மற்றும் அவரது நண்பர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் முரளி கிருஷ்ணன், தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர்களான தருண், விக்னேஷ், நவீன், தீபக், கார்த்திக், கவுதம், சஞ்சய் ஆகிய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News