உள்ளூர் செய்திகள்

தைப்பூசத்தையொட்டி கோவை - பழனிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

Published On 2023-01-20 07:44 GMT   |   Update On 2023-01-20 07:44 GMT
  • பொங்கல் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி போடிநாயக்கனூர் வரை இயக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
  • தைப்பூசம் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திருப்பூர் :

திண்டுக்கல் - கோவை அகல ரெயில்பாதை பணிகள் நிறைவு பெற்று கடந்த 2015ல், இருந்து ரெரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதில், பயணிகள் வசதிக்காக சீசன் சமயங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பல கட்ட போராட்டத்துக்கு பின் பொங்கல் பண்டிகைக்காக கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்தது.

பொங்கலை தொடர்ந்து தைப்பூச விழா பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

இவ்வாறு செல்பவர்கள், சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்புகின்றனர். அப்போது உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உட்பட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல், பாதிக்கப்படுகின்றனர்.

பழனியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள், மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம் போன்ற நிறுத்தங்களில் நிற்பதில்லை.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தைப்பூசத்துக்காக, கோவை - பழனி சிறப்பு ரெயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனி - பாலக்காடு சிறப்பு ரெயில் இயக்கினால் கேரளாவிலிருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.

மேலும் கோவை - திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி போடிநாயக்கனூர் வரை இயக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:- பொள்ளாச்சி - பழநி ரோட்டில் பல்வேறு இடங்களில் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகளும், ரோடு விரிவாக்க பணிகளும், தேசிய நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனால் இந்த ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். வரும், 27ந் தேதி பழனி கும்பாபிேஷகம் மற்றும் பிப்ரவரி 5ந் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எனவே பக்தர்களின் வசதிக்காக கோவை- திண்டுக்கல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலை நிரந்தரமாக்க வேண்டும். அல்லது தைப்பூசம் வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News