நாகர்கோவிலில் பஸ்சில் நகை பறித்த பெண் கைது
- பெண் பயணி ஒருவர் கழுத்தில் கிடந்த நகையை பெண்ணொருவர் பறிக்க முயன்றார்
- பெண்ணை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வேப்பமூடு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவர் கழுத்தில் கிடந்த நகையை பெண்ணொருவர் பறிக்க முயன்றார். இதனால் உஷாரான பெண் கூச்சலிட்டார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் நகையை பறிக்க முயன்ற பெண்ணை மடக்கி பிடித்தனர்.
பின்னர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டனர்.மீட்கப்பட்ட பெண்ணை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிப்பட்ட பெண்ணுடன் வேறு நபர்கள் யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஓடும் பஸ்ஸில் பட்டப்பகலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.