புதிய தி.மு.க. உறுப்பினர்களை சேர்க்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
- கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ் வலியுறுத்தல்
- செயல்படாத நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டார். மாவட்ட அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு பூத் கமிட்டி இறுதி செய்யப்படுகிறது. பூத் கமிட்டி அமைத்துள்ள பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க.வினர் மேலும் தீவிரபடுத்த வேண்டும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தலா 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது நமது இலக்காகும். அந்த இலக்கை அடைய நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
செயல்படாத நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ஒரு சில நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.