உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை- மாவட்ட கலெக்டர் உத்தரவு

Published On 2022-06-21 07:52 GMT   |   Update On 2022-06-21 07:52 GMT
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
  • காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

தருமபுரி:

கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக வந்தது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கர்நாடகாவிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக இன்று காலை ஒகேனக்கல்லுக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இன்று முதல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கூடாது. மறு உத்தரவு வரும் வரை வரும் இந்த தடை தொடரும் என மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கையில் தெரிவித்தார்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இன்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீர்வரத்து அதிகம் வருவதால் போலீசார் காவிரி ஆற்றின் கரையோரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News