உள்ளூர் செய்திகள்

தப்பிய ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார்

Published On 2022-10-07 10:00 GMT   |   Update On 2022-10-07 10:00 GMT
  • ஹரிஸ் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மாலை 6 மணிக்கு பரோல் முடித்து சிறையில் ஆஜராகி இருக்க வேண்டும்.
  • தலைமறைவான ஹரிசை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

சேலம்:

சென்னை தண்டை யார்பேட்டையை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 44). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை அடிப்படையில் அவருக்கு கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி சிறை அதிகாரிகள் 3 நாட்கள் பரோல் வழங்கினர். இதையடுத்து ஹரிஸ் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மாலை 6 மணிக்கு பரோல் முடித்து சிறையில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் மாலை 5.30 மணிக்கு சிறைக்கு போன் செய்து, 10 நிமிடங்களில் ஆஜராகிவிடுவதாக தெரிவித்த அவர், சிறை நுழைவு வாயில் வரை வந்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்ற வார்டன் ராமகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

தப்பி ஓடிய கைதியை பிடிக்க, சென்னை மற்றும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஹரிசை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.இதனிடையே ஹரிஸ் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார், பெங்களூரு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News