உள்ளூர் செய்திகள்

ரூ.13 லட்சம் கடன் தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது தாக்குதல்: கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது

Published On 2023-11-09 07:51 GMT   |   Update On 2023-11-09 07:51 GMT
  • ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.
  • போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார்.

பெரம்பூர்:

கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற பி. எஸ். என். எல். ஊழியர். இவரிடம் உடன் பணியாற்றிய ஆவடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது மகளின் திருமணத்திற்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.13 லட்சம் வாங்கினார்.

பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஜெகதீசனிடம் வீட்டு பத்திரத்தை ரவிக்குமார் திருப்பி கேட்டார். அதனை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாக கூறினார். இதனை நம்பி ஜெகதீசனும் அடமான வீட்டு பத்திரத்தை கொடுத்தார். ஆனால் ரவிக்குமார் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து ஜெகதீசன் பலமுறை கேட்டும் ரவிக்குமார் சரியான பதில் கூறவில்லை.

இந்நிலையில் சம்பவத்தன்று பணம் குறித்து ஜெகதீசன் கேட்டபோது ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஜெகதீசன் போலீஸ் இணை கமிஷனர் (வடக்கு ) அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார், அவரது மனைவி மீனாட்சி, மகள் பிரேமலதா, அவரது கணவர் நாதன், ரவிக்குமாரின் மகன் பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News