உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க.வின் பி டீம்தான் சீமான்- எம்.பி.ஜோதிமணி பேட்டி
பா.ஜ.க.வின் பி டீம்தான் சீமான் என கரூர் எம்.பி.ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர்:
கரூரில் செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறும்போது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியிருந்தற்கு நான் பதில் அளித்திருந்தேன்.
அதற்காக என்னை அவர் மிகவும் ஆபாசமாக, தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசியுள்ளார். அரசியலில் ஈடுபடும் பெண்கள் மீது அவதூறு பரப்புவது ஆபாச தாக்குதல் மேற்கொள்வது போன்றவற்றால் அவர்கள் அரசியலிருந்தே ஓடிவிடுவார்கள் என சீமான் நினைக்கிறார்.
ஆபாச தாக்குதலை எதிர் கொள்வது எனக்கு புதிதல்ல. அருவருக்கதக்க விமர்சனங்கள் எனக்கு புதிதல்ல. பா.ஜ.க.வின் பி டீம்தான் சீமான். அதனால் தான் அவரும் இப்படி செய்கிறார். என்னை மட்டுமில்லாமல் எனக்கு வாக்களித்த மக்களையும் அவர் அவதூறாக பேசியுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியில் உள்ள நற்குணம் கொண்ட தம்பி, தங்கைகளை சீமான் போன்றவர்கள் தவறாக வழி நடத்தி விடக்கூடாது என்பதற்காக சீமானை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்கிறோம். தொடர்ந்து செய்வோம் என்றார்.
பேட்டியின் போது, கரூர் மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தென்காசி எஸ்கேடி காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.