உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே தமிழக எல்லையில், ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு
ஓசூர் அருகே தமிழக எல்லையில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓசூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினம் இன்று (21-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவாக, சமூகநல்லிணக்கம், உலக அமைதி மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பெங்களூருவில் இருந்து ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூருக்கு, ஆண்டுதோறும் ஜோதியை கொண்டு செல்வது வழக்கம்.
அந்த வகையில், 31-வது ஆண்டு ராஜீவ் ஜோதி யாத்திரை, நேற்று கர்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. துணைத்தலைவர் சவுகத் அலி தலைமையில், பெங்களூருவில் இருந்து புறப்பட்டது. இதனை கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், செயல் தலைவர் சலீம் அகமது ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
வழியில், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடியில், மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஐ.என்.டி.யு.சி.மாநில செயல்தலைவர் ஆர்.குப்புசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சூரியகணேஷ், நீலகண்டன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு ஜோதி யாத்திரையை வரவேற்றனர். இந்த ஜோதியை, இன்று ஸ்ரீபெரும்புதூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில நிர்வாகிகள் பெற்றுக்கொள்கின்றனர்.