உள்ளூர் செய்திகள்
25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா
மணப்பாறை அருகே பெரியகுளம் நிரம்பியுள்ளதால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிறைந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய நீர் இன்றி மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு போதிய நீர் நிரம்பி இருந்ததால் சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்னுசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் மீன்கள் வாங்கி குளத்தில் விடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்னுசிங்கம்பட்டி மற்றும் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
3 ஊரின் முக்கியஸ்தர்கள் துண்டை அசைத்து மீன்பிடிக்க உத்தரவு வழங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு 15 நிமிடங்களில் குளத்தில் இருந்த மொத்த மீன்களையும் கொத்து கொத்தாக அள்ளிச் சென்றனர்.
இதில் கட்லா, விரால், குரவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர்.