உள்ளூர் செய்திகள்
திருச்சி அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திருச்சி அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஏதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி அமிர்தம் (45) என்பவர் எதுமலை கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவரிடம் தனது கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்குமாறு கேட்டு மனு அளித்தார்.
அப்போது வி.ஏ.ஓ. சுரேஷ், இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம் வழங்குமாறு, அமிர்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அமிர்தம் திருச்சி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு டி.எஸ்.பி. மணிகண்டன் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அமிர்தத்திடம் கொடுத்து வி.ஏ.ஓ.விடம் அளிக்குமாறு கூறினர்.
அதன்படி இன்று காலை எதுமலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற அமிர்தம் ரசாயனப் பொடி தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சுரேசிடம் கொடுத்தார். அதனை சுரேசும் வாங்கி வைத்துக்கொண்டார்.
இதனை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேசை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பலரிடம் வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.