உள்ளூர் செய்திகள்
பத்ம விருதுகள் அறிவிப்பில் விவசாயத்துறை புறக்கணிப்பு - விவசாய சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு
பத்ம விருதுகள் அறிவிப்பில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவதாக விவசாய சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கரூர்:
தமிழ் நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு 128 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. எப்போதும் போல நிகழாண்டும் விவசாயத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் விவசாயிகள் உள்ள நாட்டில் இது விவசாய விரோதப்போக்கு. விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோரும் கட்சிகள் இதில் அமைதிகாப்பது ஏன். விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண் டும். 50 சதவீத விவசாய சாதனையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும். இந்நாட்டில் விவசாயிகள் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படுவது புரியாத புதிராக உள்ளது. விவசாய விரோத போக்கை அரசு கைவிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் மணல் விற்பனை நடைபெற வில்லை. இதனால் மக்கள் மணலை மறந்து எம் சாண்ட், பி சாண்ட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மணல் தான் நிலத்தடி நீரை செறிவூட்டுகிறது. ஆற்று நீரை சுத்திகரிக்கிறது. மணல் அள்ளினால் சுற்றுச்சூழல் மாசுபடும். எனவே மணல் அள்ளுவதை கைவிட வேண்டும்.
அரசே மது விற்பனை செய்யும்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எதற்கு? தமிழகத்தில் மொலசஸில் இருந்து மது தயாரிக்கப்படுகிறது. அரிசி உற்பத்தி அதிகரித்திருப்பதால் போதிய விலையில்லை. எனவே அரிசி, வாழையிலிருந்து மது தயாரிக்கலாம். அரசு எத்தனால் இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் மொலசஸில் இருந்து எத்தனால் தயாரித்து அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம்.
உள்ளாட்சி தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்பினர் அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பிடமே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வர வேண்டும். ஊராட்சி வார்டு முதல் மாநகராட்சி மேயர் வரை கட்சி, சின்னமின்றி போட்டியிட வகை செய்ய வேண்டும். இதன் மூலம் நல்லவர்கள் பொறுப்பு வர வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கூறினார்.