உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காற்று ஒலி மாசு அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்ஹாரன் வாகனங்களால் காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்து உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் இயக்கப்படும் தண்ணீர் டேங்கர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவை தெருக்களில் அதிக ஒலி எழுப்புகின்றன.
இதுகுறித்து ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகம்மது கூறியதாவது:-
தண்ணீர் டேங்கர் லாரிகள், தெருக்களில் செல்லும் மினி லாரிகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் பாரதிநகர், கேணிக்கரை பகுதியில் காலை நேரங்களில் தண்ணீர் விநியோகிக்கும் டேங்கர் லாரிகள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதாக புகார்கள் வந்துள்ளன. இது போல் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், லோடு வேன்கள், பிக்அப் மினி லாரிகளில் வெங்காயம், வெள்ளைப் பூண்டு, காய்கறிகள், பழங்கள் விற்போர் அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி பெருக்கிகளை அமைத்து விற்கின்றனர். இதனால் முதியோர், மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.