உள்ளூர் செய்திகள்
மதுரையில் நிதி நிறுவனத்தில் கொள்ளை
மதுரையில் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருவாதவூர் மல்லிகை நகரை சேர்ந்தவர் குருசாமி (வயது48). இவர் எஸ்.எஸ். காலனியில் உள்ள துரைசாமி நகர் பகவதி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றார். சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்தநிலையில் அலுவலகத்துக்கு வந்த குருசாமி பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 லட்சத்து 11 ஆயிரத்து 990 ரூபாய் கொள்ளளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. எனவே போலீசார் அந்த பகுதியில் 24மணிநேரமும் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க வேண்டிய எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவில் போலீசாருக்கு கடும் பற்றாக்குறை உள்ளது.
சப்-&இன்ஸ்பெக்டர் உள்பட பலர் இன்னமும் நியமிக்கப்படவில்லை. எனவே அங்கு குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவது போலீசாருக்கு பெரிதும் சவாலாக விளங்கி வருகிறது.
எனவே மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.