உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான முத்து மற்றும் அவரது பாட்டி

அய்யலூரில் அடுத்தடுத்த விபத்தில் 2 பேர் பலி

Published On 2022-01-18 08:18 GMT   |   Update On 2022-01-18 08:18 GMT
திண்டுக்கல் அருகே அய்யலூரில் பாட்டியும், பேரனும் விபத்தில் பலி
வடமதுரை:

அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி முடக்குப்பட்டியை சேர்ந்தவர் முத்து (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பிய முத்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அய்யலூர் சென்றார்.

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே சென்ற போது பழுதாகி நின்றிருந்த போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.

ஆத்திரமடைந்த அவர்கள் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஸ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முத்துவின் பாட்டி பழனியம்மாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணப்பாறையில் இருந்து அய்யலூருக்கு வந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பழனியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவங்கள் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News