உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் 1500 போலீசார் பாதுகாப்பு
முழு ஊரடங்கையொட்டி கன்னியாகுமரியில் நாளை 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நாகர்கோவில்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு தினத்தில் பஸ்கள் முழுவதும் ஓடாது. இதனால் இரவு ஸ்டே பஸ்களை டெப்போகளுக்கு கொண்டு வருமாறு டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிவதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
களியக்காவிளை, அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக் கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடங்க உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரண்டு ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண் டாடப்படும். நாளை காணும் பொங்கல் விழா வருவதை அடுத்து பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண் டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணும் பொங்கலை யடுத்து சுற்றுலாத் தலங்களிலும் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றுலா தலங்களில் செல்வதற்கு நேற்று முதல் தடை உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை தடை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதித்துள்ள நாட்களில் செல்லக் கூடாது மீறி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்து விட்டு இன்று காலை வந்தனர். அவர்கள் கடற் கரைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.