உள்ளூர் செய்திகள்
கோவையில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து பேக்கரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது
கோவையில் பேக்கரி ஊழியரை ஏமாற்றி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
கோவை:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). பேக்கரி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உக்கடம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரின் அருகில் வந்து எங்கே செல்ல வேண்டும் என கேட்டனர்.
அதற்கு அவர் உக்கடம் செல்ல வேண்டும் என கூறினார். இதனையடுத்து வாலிபர்கள் தாங்கள் கொண்டு சென்று விடுவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய சுரேஷ்குமார் வாலிபர்களின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.
பின்னர் வாலிபர்கள் சுரேஷ்குமாரை சிரியன் சர்ச் அருகே உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம், மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த தூத்துக்குடியை சேர்ந்த முருகன் (29), தேனியை சேர்ந்த செய்யது அப்ரடி (19), திருமுருகன் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.