உள்ளூர் செய்திகள்
கோவையில் மூதாட்டியிடம் அரசு அதிகாரி என கூறி 7 பவுன் செயின் பறிப்பு
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற மூதாட்டியிடம் அரசு அதிகாரி என கூறி 7 பவுன் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
நாமக்கல் மாவட்டம் நெட்டையம்பாளைத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 70). விவசாயி. இவரது கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவரை கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்.
நேற்று காளியம்மாள் அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அப்போது கோவிலுக்கு முன்பு டிப்டாப் உடையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
அவர் காளியம்மாளிடம் வந்து தான் அரசு அதிகாரி என்றும் கோவிலுக்குள் நகைகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்.
இதனையடுத்து மூதாட்டி தான் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் ஒரு பேப்பரில் நகைகளை வைத்து கொடுத்தார்.
இதனை பெற்றுக்கொண்ட மூதாட்டி உள்ளே சென்று தனது கைப்பையை பார்த்த போது அதில் நகைகள் இல்லை. வாலிபர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து மூதாட்டி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து அரசு ஆதிகாரி என கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 7 பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.