உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பெண் நக்சலைட்டு பதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்த நபரால் பரபரப்பு
போலீசார் பெரிச்சிப்பாளையத்திற்கு சென்று அங்குள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்றிரவு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர், திருப்பூர் பெரிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் நக்சலைட் ஒருவர் பதுங்கி உள்ளார். அவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்.
இதையடுத்து சென்னை போலீசார் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பெரிச்சிப்பாளையத்திற்கு சென்று அங்குள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு பெண் நக்சலைட்டு யாரும் இல்லை. இதனால் தொலைபேசியில் பேசிய நபர் தவறான தகவலை தெரிவித்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் யாரென்று விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது.