உள்ளூர் செய்திகள்
சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு பேல்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
அவினாசி:
அவினாசி ஒன்றியம் தெக்கலூர் அருகே வெள்ளான்டிபாளையத்தில் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒருபெண் உள்பட 7 பேர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எந்திரத்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதையடுத்து சில நிமிடங்களில் எந்திரத்தில் தீப்பிடித்து அருகில் இருந்த பஞ்சு பேல்களிலும் தீ பரவி எரிந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் மில்லைவிட்டு வெளியே ஓடிவிட்டனர்.
உடனடியாக இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு பேல்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.