உள்ளூர் செய்திகள்
பள்ளிகளில் ஸ்டேஷனரி ஸ்டோர் அமைக்க கோரிக்கை
சலுகை விலையில் வழங்கினால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறுவர்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்டத்தில் அதிகப்படியான மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவர்கள் தங்களுக்குத்தேவையான ஸ்டேஷனரி பொருட்களை அருகே உள்ள கடைகளில் இருந்து வாங்கிக்கொள்கின்றனர்.
குறிப்பாக பேனா, பென்சில்,ரப்பர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பொருட்களை அடிக்கடி வாங்கவேண்டியுள்ளது. சில கடைகளில் கூடுதல் விலைக்கு தரமின்றி இத்தகையப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘ஸ்டேஷனரி ஸ்டோர்’ அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
பள்ளிகளில் ஸ்டேஷனரி ஸ்டோர் அமைத்து ஸ்கூல் பேக், பவுச்,பேனா, பென்சில், ரப்பர், நோட்டு, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட ஏராளமானப்பொருட்களை விற்கலாம். சலுகை விலையில் வழங்கினால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெறுவர்.
பள்ளி நேரத்திலும் ஏதேனும் பொருட்கள் எடுத்துவரவில்லை என்றால் மாணவர்கள் எளிதாக வாங்க முடியும். இதன் வாயிலாக கிடைக்கப்பெறும் வருவாயை பள்ளி மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். நிதி ஒதுக்கீடு செய்து ஸ்டேஷனரி ஸ்டோர் அமைக்க துறை ரீதியான அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.