நெல்லையில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
நெல்லை:
தமிழகத்தில் அரசு பஸ்சில் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கியபடி சென்றால், அந்த பஸ்சின் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தென்காசியில் இருந்து நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நெல்லை அருகே வந்த போது படிக்கட்டில் 3 பேர் தொடங்கியபடி வந்தனர்.
அப்போது பஸ்கண்டக்டர் பாலமுருகன் அவர்களை சத்தம்போட்டு பஸ்சுக்குள் வரும்படி அழைத்தார். அப்போது பஸ்கண்டக்டருக்கும், வாசலில் தொங்கியபடி வந்த 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் கண்டக்டர் தொடர்ந்து வலியுறுத்தி அவர்களை உள்ளே வரச்செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பஸ் நெல்லை வழுக்கோடை அருகே வந்த போது பஸ்சில் தகராறு செய்த 2 பேர் கண்டக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு, இறங்கி ஓடிவிட்டனர். அப்போது படிக்கட்டில் மற்றொருவர் பஸ்சுக்குள் இருந்ததால் பஸ்சில் வந்த பயணிகள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது அவர் தனக்கும் தகராறு செய்தவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்தனர்.
இதனைத்தொடர்ந்து கண்டக்டர் பாலமுருகன் நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டரை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பழைய பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (வயது 40), கிருஷ்ணபேரியை சேர்ந்த பெரியராஜா (27). ஆகியோர் கண்டக்டரை தாக்கியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.