உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் அதிகரிக்கும் கொரோனா- முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு
கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சம் தொட்ட நிலையில் முக கவசம் அணிதல், தடுப்பூசி போன்றவற்றால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதில் இருந்து மக்கள் விடுபட்டு வெளியில் வரும் முன்பு ஒமைக்ரான் மீண்டும் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களை தற்காத்து கொள்ளுமாறு முக கவசம் அணிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 3-ந் தேதி 52 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 4-ந்தேதி 50 ஆக குறைந்தது. ஆனால் நேற்று திடீரென்று பாதிப்பு 65 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 608 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். கொரோனா அதிகரித்து வருவதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக முககவசம் அணியாதவர்களுக்கு முன்பு போல் அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.