உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் ஒப்பந்த தொகையை செலுத்தாத 14 டாஸ்மாக் பார்களுக்கு சீல்வைப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்கள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஏற்கனவே ஒப்பந்தத் தொகையை செலுத்தி பார் நடத்தி வந்தவர்கள் பார்களை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தாராபுரம் பகுதியில் பெரும்பாலான பார்கள் ஒப்பந்தத் தொகையை செலுத்தாமல் இயங்கி வருவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் உதவியுடன் தாராபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஒப்பந்தத் தொகையை செலுத்தாமல் 14 டாஸ்மாக் பார் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் பார் உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.