உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்
கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நாராயணமூர்த்தி சொர்க்கவாசல் வழியாக சென்று நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருப்பூர்:
ஸ்ரீரங்கம் கோவில் பூஜை முறையை பின்பற்றும் பெருமாள் கோவில்களில் வரும் 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டில் வைகுண்ட ஏகாதசி விழா கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியில் நடைபெறுகிறது. அதனை பின்பற்ற திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களிலும் 14-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் 14-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், 4:30 மணிக்கு வைகுண்ட நாராயணமூர்த்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நாராயணமூர்த்தி சொர்க்கவாசல் வழியாக சென்று நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
திருப்பூர், தாராபுரம் ரோடு கோவில்வழியில் உள்ள பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில்வருகிற 14-ந்தேதி அதிகாலையில் உற்சவமூர்த்தி திருமஞ்சன பூஜையும், காலை6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீவரதராஜபெருமாள் புஷ்ப அலங்காரத்துடன் கருடவாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும் 15-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு உற்சவம் திருமஞ்சனமும், காலை, 6 மணிக்கு துவாதசி பாராயணம் நிகழ்ச்சியும்,7 மணி முதல் அன்னதானமும் நடைபெற உள்ளது.