கடையம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை - அண்ணன் வெறிச்செயல்
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது.
இவரது அண்ணன் அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் (59). அண்ணன், தம்பிகளுக்கிடையே சொத்து தகராறு காரணமாக பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சேகருக்கு சொந்தமான தோட்டம் மயிலப்பபுரம் பெட்ரோல் பங்க் அருகே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சேகர் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த அருணாசலம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அருணாசலம் மண்வெட்டியால் சரமாரியாக தம்பியை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக அருணாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.