முடிகொண்டான் கிராமத்தில் தெருக்களில் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் சாலை மறியல்
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள முடிகொண்டான் கிராமத்தில், மேலத்தெரு மற்றும் கீழத்தெருவில், மழைநீர் தேங்கியதால், இரண்டு தெரு மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நன்னிலம் போலீசார் வந்து பேசி, மறியலை கைவிட செய்தனர். மேலத்தெரு, கீழத்தெருவிலுள்ள மழைநீர், அந்தத் தெருவில் உள்ள ஒரு தனியார் இடத்தின் வழியாக வழிந்து ஓடும், ஆனால் இந்த ஆண்டு, தனியார் நில உரிமையாளர் தனது இடத்தில் குளம் வெட்டி, மீன் வளர்ப்பில் ஈடுபட்டதால், அதன் வழியாக மழை நீர் வடிய வழி தராத காரணத்தினால், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, மழை நீர் வடிவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்த நிலையில், முடிகொண்டான் மேலத்தெரு கீழத்தெரு வாசிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் மயிலாடுதுறை- திருவாரூர் நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.