செய்திகள்
சிவதன்ஷிகா

சுசீந்திரம் அருகே தொட்டிலில் விளையாடிய சிறுமி பலி

Published On 2021-10-23 09:59 GMT   |   Update On 2021-10-23 09:59 GMT
சுசீந்திரம் அருகே தொட்டிலில் விளையாடியபோது சிறுமி கழுத்து இறுகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்.ஜி.ஓ. காலனி:

கோட்டார் வடலிவிளையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 34) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஸ்ரீதேவி (30). இவர்களுக்கு சிவதன்ஷிகா (10) என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

சந்திரசேகர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பறக்கை கீழ ரதவீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். சிவதன்ஷிகா அங்கு உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் சந்திரசேகர் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் ஸ்ரீதேவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

ஸ்ரீதேவி பக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது சிவதன்ஷிகாவிடம் சகோதரர்களை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். சிவதன்ஷிகா வீட்டிலிருந்த தொட்டிலில் சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிவதன்ஷிகாவின் கழுத்தில் தொட்டிலின் சேலை மாட்டிக்கொண்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். வேலைக்கு சென்ற ஸ்ரீதேவி வீட்டுக்கு வந்தபோது சிவதன்ஷிகா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்- இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான சிவதன்ஷிகாவின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

தொட்டிலில் விளையாடியபோது சிறுமி கழுத்து இறுகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News