செய்திகள்
பூலாங்கிணறு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன், முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு மின்சார தானியங்கி மணியை வழங்கினார்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், சர்வதேச விண்வெளி வார விழா மற்றும் தூய்மை பாரத இயக்கம் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் வரவேற்று பேசினார். பூலாங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன், முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு மின்சார தானியங்கி மணியை வழங்கினார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் கண்ணப்பன் எதிர்கால கல்வி வாய்ப்புகள் எனும் தலைப்பில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் ரத்தினசாமி விண்வெளி அற்புதங்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.
தூய்மை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.