செய்திகள்
பலி

பழனி அருகே யானை மிதித்து மூதாட்டி பலி

Published On 2021-10-01 11:05 GMT   |   Update On 2021-10-01 11:05 GMT
பழனி அருகே தொடர்ந்து யானைகள் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்துசெட்டு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி பாக்கியம் (வயது 60). அந்தோணிராஜ் இறந்து விட்டதால் பாக்கியம் அவரது மகள் மற்றும் மகன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

தினமும் பாக்கியம் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று விறகு வெட்டி விற்று வருவது வழக்கம். அதன்படி நேற்று விறகு எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு வரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இன்று காலையில் புளியமரத்து செட்டு வனப்பகுதியில் தேடிப்பார்த்தனர்.

அப்போது பாக்கியம் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். அருகில் யானை சென்றதற்கான தடங்களும் இருந்தது. இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் யானை தாக்கி பாக்கியம் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யானை தாக்கி தோட்டக்காவலாளி உள்பட 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News