செய்திகள்
உடுமலை அருகே சம்பள பாக்கிக்காக லாரியை திருடிய வாலிபர் கைது
லாரி திருட்டு போனதாக உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
உடுமலை:
உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் நடந்து வருகிறது. நெடுஞ்சாலை பணிகளுக்காக டிப்பர் லாரிகள் மூலம் கற்கள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் பரிஞ்லால் என்பவர் சம்பவத்தன்று டிப்பர் லாரியை கணபதிபாளையம் அருகே நிறுத்தி விட்டு அங்கிருந்த ஊழியரிடம் கையெழுத்து வாங்குவதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது டிப்பர் லாரியை காணவில்லை.
இதுகுறித்து லாரி திருட்டு போனதாக உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் லாரி கணபதிபாளையத்திலிருந்து ஆர்.வேலூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரியை போலீசார் மீட்டனர். மேலும் லாரியை திருடியதாக பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது22) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் தினேஷ்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும், தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கிக்காக லாரியை திருடிச்சென்று ஆர்.வேலூர் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றதும் தெரியவந்தது.