செய்திகள்
காங்கேயம் பகுதியில் வேல மரங்களை அழிக்கும் சாராயம் காய்ச்சும் கும்பல்
சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமே வேல மரப்பட்டையை எடுப்பர் எனவும், வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த பட்டை பயன்படாது எனவும் கூறப்படுகிறது.
காங்கேயம்:
காங்கேயம், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களிலும், மாநில மற்றும் கிராம சாலை ஓரங்களிலும் அதிக அளவில் வெள்ள வேல மரங்கள் வளர்ந்து உள்ளன.
விளைச்சல் நிலங்களில் உள்ள மரங்கள் ஆடுகளுக்கு நிழலாக இருக்க விவசாயிகள் வளர்க்கின்றனர். காங்கேயம், ஊதியூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாய தோட்டங்களில் உள்ள வளர்ந்த வெள்ள வேலமரத்தின் பட்டைகளை சாராயம் காய்ச்ச தொடர்ச்சியாக மர்ம நபர்கள் இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து உறித்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமே வேல மரப்பட்டையை எடுப்பர் எனவும், வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த பட்டை பயன்படாது எனவும் கூறப்படுகிறது. வேலமரத்தின் பட்டை தான் சாராயத்தின் மூலப் பொருளாகும். இவ்வாறு பட்டைகள் உரிக்கப்படுவதால் நாளடைவில் மரம் காய்ந்து போகும் அபாயம் உள்ளது.
எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள வேலமர பட்டைகள் சாராயம் காய்ச்ச உறிக்கப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.